உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் எத்தகைய சூழ்ச்சித் திட்டங்களை வகுத்தாலும், அவற்றை தோற்கடிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது விடயத்தில் எதிரணிகள் ஒன்றிணைந்து கூட்டு தாக்குதலை மேற்கொள்ளும். – இவ்வாறு டலஸ் அழகப்பெரும தலைமையிலான ‘சுதந்திர மக்கள் சபை’யின் முக்கியஸ்தரும், சட்டத்துறை பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் பீரிஸ் கூறியவை வருமாறு,
2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் உள்ளாட்சிசபைத் தேர்தல். நடத்தப்பட வேண்டும். அதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போது ஆரம்பமாகியிருக்க வேண்டும். எனவே, தேர்தலை நடத்துவதற்கான நிதியை அரசாங்கத்திடம், தேர்தல் ஆணைக்குழு கோர வேண்டும். அதிகாரிகளை நியமிக்க வேண்டும். உரிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடும்கூட.
ஆனால் உள்ளாட்சி சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் தீவிரம் காட்டிவருகின்றது. இதன் ஓர் அங்கமாக தேர்தல் முறைமை பற்றி ஆராய தெரிவுக்குழு அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. ஏனெனில் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்கு தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழு பல சந்திப்புகளை நடத்தியது. தற்போது அறிக்கைகூட முன்வைக்கப்பட்டுள்ளது. அக்குழுவால் ஆழமாக ஆராயப்பட்டு முன்வைக்கப்பட்ட அறிக்கை இருக்கையில், மற்றுமொரு தெரிவுக்குழு எதற்கு?
தேர்தலை நடத்துவதற்கான நிதியை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பிரதான கடப்பாடு என உயர்நீதிமன்றம்கூட இதற்கு முன்னர் தீர்ப்பளித்துள்ளது. மக்களின் சர்வஜன வாக்குரிமையின் ஓர் அங்கமே தேர்தல். சர்வஜன வாக்கெடுப்பின்றி அதனை பிற்போட முடியாது.
அதேவேளை, உள்ளாட்சி சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்திக்கொள்வதற்காக எதிரணிகள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளன.
இதற்கிடையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களில் பிரதான இடத்தை வகிப்பது தேர்தல் ஆணைக்குழுவாகும். அதற்கான உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவை ஊடாக நியமிக்கப்படுவார்கள். எனவே, அரசியலமைப்பு பேரவைக்கு மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
புதிய தேர்தல் ஆணைக்குழுவை வைத்து தேர்தலை பிற்போட அரசு சூழ்ச்சி செய்தாலகூட, அவை அனைத்தையும் தோற்கடிக்க எதிரணிகள் நடவடிக்கை எடுக்கும்.– என்றார்.