மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் அப்பளுக்கற்ற நோக்கோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணை செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சராக தான் இருக்கும் வரையில், குறுகிய நோக்கங்களுக்காக யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் (04) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னுடைய காலப் பகுதிக்குள்ளேயே, கடலட்டைப் பண்ணைகள் அனைத்தையும் சட்ட ரீதியானவையாக மாற்றிக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாச்சிக்குடா மற்றும் இரணைதீவு பகுதியில் கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளவர்களில் சுமார் 80 பண்ணையாளர்களுக்கு, பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை பூநகரிப் பிரதேச செயலகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் தன்னுடைய ஆதங்கத்தினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.