போலி நாணயத்தாளுடன் இராணுவ சிப்பாயொருவர் தியத்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள் மீட்கப்பட்டுள்ளது.
தியத்தலாவை நகரின் மதுபான விற்பனை நிலையத்தில் இராணுவ சிப்பாய், போலி 5000 ரூபா நாணயத்தாளினை கொடுத்து மதுபானமொன்றினை கொள்வனவு செய்ய முயன்றுள்ளார். இதன்போதே மதுபான விற்பனை நிலைய முகாமையாளர், இராணுவ சிப்பாய் வழங்கிய ஐயாயிரம் ரூபா நாணயத்தாள் மீது சந்தேகம் கொண்டு அது குறித்து தியத்தலாவைப் பொலிஸாருக்குஅறிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்று 5000 ரூபா நாணயத்தாளை பரிசீலித்த போது அது போலியானது என தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் இராணுவ சிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
அவ்விசாரணையின் போது இராணுவ சிப்பாய் இராணுவ பயிற்சிப்பாடசாலை கணினித் தொகுதியின் மூலம் இரு ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை பெற்றதாகவும் அந்நோட்டுக்களில் ஒன்றை பயன்படுத்தி மதுபானத்தினைப் பெற முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார். இச்செயற்பாடுகளுக்கு மேலும் மூன்று இராணுவத்தினர் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் கூறியுள்ளார்.