மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை – ஓல்டன் தோட்டத்தில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாக சபையினரால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக குறித்த ஆலயத்தின் திருத்த பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், விசேட தினங்களில் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவது வழமை.
அந்த வகையில் நேற்று (4) வெள்ளிக்கிழமை ஆலய பூசகர் கோவிலுக்கு பூஜை வழிபாடு செய்வதற்கு சென்றவேளை, குறித்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி ஆலய நிர்வாக சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
கடந்த சில மாதங்களாக மேலும் பல கோவில்கள் உடைக்கப்பட்டு ஆலய உண்டியல் நகைகள் என்பன களவாடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாமிமலை மல்லியப்பு , பாக்றோ, கவரவில, ஓல்டன் பணிய கணக்கு போன்ற தோட்ட கோவில்களும் இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன.