கொழும்பு,நவ 05
மங்கிபொக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சல் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய எவருக்கும் இதுவரையில் அந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறிப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எமது செய்தி சேவை இந்த விடயம் தொடர்பில் வினவிய போது பதிலளித்த அந்த அமைச்சின், உயர் அதிகாரி ஒருவர், மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொற்றுக்குள்ளான நபருக்கு சிகிச்சையளிக்கும்போது, சுகாதார பணிக்குழாமினர், பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
துபாயில் இருந்து அண்மையில் நாடுதிரும்பிய ஒருவருக்கு, குரங்கு காய்ச்சல் தொற்று உறுதியானது.
20 வயதான களனி பகுதியைச் சேர்ந்த அவர், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.