சான் பிரான்சிஸ்கோ, நவ 05
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் வந்த பின் அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் அவர் இறங்கினார்.
உலகம் முழுவதும் பணியாற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, டுவிட்டரின் இந்திய பணியாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.
இதனிடையே, டுவிட்டரில் எழுத்தாளர் டிம் அர்பன் பதிவிட்டிருந்த கேள்விக்கு எலான் மஸ்க் அளித்த பதில் அனைவரையும் கவர்ந்தது. “நீங்கள் அறிந்த கேளிக்கையான சதிக் கோட்பாடுகளில் உண்மையானதாக இருக்கும் என்று எதை நினைக்கிறீர்கள்?’ என்று எழுத்தாளர் டிம் அர்பன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த கேள்விக்கு பலரும் பதில் அளித்திருந்தனர். அவரை 6.75 லட்சத்துக்கும் அதிகமானோர் டுவிட்டரில் பின் தொடருகின்றனர். இந்த கேள்விக்கு எலான் மஸ்க் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, “நான் ஒரு வேற்றுகிரகவாசி, எனது சொந்த கிரகத்திற்கு திரும்ப முயற்சி செய்கிறேன்” என்று பதிலளித்தார்.
எலான் மஸ்க்கின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்தது.