எதிர்வரும் நாட்களில் எரிபொருள் வரிசை குறைவடையும்

கொழும்பு,நவ 06

இந்த வாரம் எரிபொருள் விலை திருத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் முன்பதிவு நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளமையினால் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருளுக்கான வரிசை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் வழமைப் போன்று முன்பதிவு நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக இலங்கை தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் எரிபொருள் வரிசை குறைவடையும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் மேலதிகமாக 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்வதற்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் காணப்படுவதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கான காலப்பகுதி இன்றுடன் நிறைவடையும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், கடந்த முதலாம் திகதி முதல் வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் 9000 முச்சக்கர வண்டிகளே இதற்காக பதிவு செய்துள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டிப் பிரிவின் பிரதானி ஜீவந்த கீர்த்திரத்ன தெரிவித்தார்.

தற்போது முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் ஒதுக்கத்தை 10 லீற்றர்களாக அதிகரிப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான பதிவு நடவடிக்கைகள் தற்போது மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுவதோடு அதனை எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களிலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *