அரசர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டு விழா: 8ஆம் திகதி வங்கி விடுமுறை நாளாக அறிவிப்பு

லண்டன்,

இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார்.

மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படும் அவர், கடந்த செப்டம்பர் மாதம் அரியணை ஏறினார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6-ந்தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்து உள்ளது.

இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ந்தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு அறிவித்து உள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாட்சிமைமிகு அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழாவை முன்னிட்டு கூடுதலாக வங்கி விடுமுறை நாளை அறிவிக்க பிரதமர் முடிவு செய்துள்ளார்.

இதன்படி, மே 6-ந்தேதி சனிக்கிழமை முடி சூட்டு விழாவை தொடர்ந்து, மே 8-ந்தேதி திங்கட்கிழமை வங்கி விடுமுறையாக இருக்கும் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி பிரதமர் ரிஷி சுனாக் கூறும்போது, புதிய அரசரின் முடி சூட்டு விழா எங்களது நாட்டின் தனித்துவ தருணம். இந்த வரலாற்று நிகழ்வை அங்கீகரிக்கும் வகையில், அடுத்த ஆண்டு இங்கிலாந்து முழுவதும் அன்றைய தினம் கூடுதலாக ஒரு நாள் வங்கி விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழாவில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, சிறப்பிக்கும் வகையிலும், அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையிலும் நாடு முழுவதும் வங்கி விடுமுறை அமலில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *