டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

அடிலெய்டு, நவ 06

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லிக் சுற்றில் இன்று காலை நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது. இதனால், பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உருவானது. இந்நிலையில், பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்று.

இதில், டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் ஷாண்டோ ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடி ஆட்டக்காரர் தாஸ் 10 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சவுமியா சர்க்கார் களம் இறங்கினார். அவர் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஷதாப் கான் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களே எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஷகிப் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தது ஆட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் அரையிறுதிக்கு சென்று விடலாம் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி தனது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரிஸ்வான் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் நூருல் ஹொசைன் தவற விட்டார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர் மேற்கொண்டு ரன்களை குவிக்க ஆடம்பித்தார். முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் பாபர் ஆசம் 25 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவர் ஆடம் இழந்த அடுத்த ஓவரிலேயே ரிஸ்வானும் 32 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் புகுந்த நவாஸ் 4 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஹாரிஸ், ஷான் மசூத் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் அந்த அணி 18.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில் 4வது அணியாக பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. அரையிறுதி சுற்றில் இந்தியா-இங்கிலாந்து, பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோத வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *