35 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் கமல்-மணிரத்திரம்

இந்தியா,நவ 06

35 ஆண்டுகளுக்குப்பிறகு இயக்குநர் மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த படம் ‘நாயகன்’. மும்பை ‘தாதா’ குறித்து கதையான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் ஹிட் அடித்தது.

இன்றளவும் படம் குறித்து ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்’திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து வெற்றி பெற்றுள்ளது.

இதற்கான அடுத்த பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல கமலை பொறுத்தவரை அவரது ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்று ரூ.450 கோடி வரை வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்நிலையில், ‘நாயகன்’படத்திற்கு பிறகு கமலும் – மணிரத்னமும் இணைவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 35 ஆண்டுகளுக்குப்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல் என்டர்டெயின்ட்மெண்ட், மெட்ராஸ் டாக்கீஸூடன் இணைந்து ரெட்ஜெயண்ட் மூவிஸூம் தயாரிக்கிறது. படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

கமலின் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *