இலங்கையில் அடுத்த ஆண்டில் இருந்து மின்தடை இல்லை!

2023ஆம் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மின்சார விநியோகத்தடையை தவிர்க்கும் நோக்கில் தனியார் டீசல் மின்சார உற்பத்தி நிலையங்களிடமிருந்து 150 மெகாவாட் அவசரகால மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் இலங்கை மின்சார சபையின் உயர் நிர்வாகம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் மற்றும் சில அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின்படி, 150 மெகாவாட் அவசர மின்சக்திக்கான கொள்முதல் செயல்முறையை உடனடியாகத் தொடங்குமாறு, மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன், அக்டோபர் 25 அன்று பொது மேலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தார்.

இதனையடுத்து நவம்பர் 01 அன்று, இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில், பொது முகாமையாளர் ரொஹந்த அபேசேகர, 150 மெகாவாட் அவசரகால மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சபைக் குறிப்பொன்றை சமர்ப்பித்திருந்தார்.

இயக்குநர்கள் குழுவும் அதற்கு ஆதரவளித்தது. 150 மெகாவாட் அவசரகால மின்சாரத்தை தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து ஆறு மாத காலத்திற்கு வாங்குவதற்கு 25 பில்லியன் ரூபாய்களை செலவிட வேண்டும் என்று பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது பாரியளவிலான பணத்தை வீணடிக்கும் செயலாகும்.

எனவே அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் தற்போதைய மின்சார விநியோகத்தடையை இரண்டு மணி நேரமாக அல்லது மூன்று மணி நேரமாக உயர்த்தி மின் நுகர்வைக் குறைப்பதே இப்பிரச்சினைக்குத் தீர்வாகும் என்றும் அந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கம் தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராவதற்காகவே மின்சார விநியோக தடையை அரசாங்கம் தவிர்க்க முயற்சிப்பதாக மின்சார சபையின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *