பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க இன்று சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவுஸ்திரேலியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அவரது பிணை கோரிக்கையும் நேற்று நிராகரிக்கப்பட்டதுடன், அவர், சிட்னி காவல்துறையினால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
உலக கிண்ணம் இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற தனுஷ்க குணதிலக்க உபாதைக்குள்ளானார்.
பின்னர், அவருக்கு பதிலாக அசேன் பண்டார நியமிக்கப்பட்டதுடன், தனுஷ்க குணதிலக்க இலங்கைக்கு அனுப்பப்படாது தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவிலேயே தங்கவைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவர், 29 வயதுடைய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, சிட்னி காவல்துறையினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டமைக்கான காரணத்தை விளையாட்டுச் அமைச்சின் செயலாளர் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டிடம் வினவியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில், உபாதைக்குள்ளான தனுஷ்க குணதிலக்க விரைவில் குணமடைந்தமையால் மேலதிக வீரராக அவர் அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருந்தாக அறிவித்துள்ளது.
உபாதைக்குள்ளான அவர் விரைவில் குணமடைந்த பின்னர், அணியின் முகாமையாளர், தேர்வு குழு உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இணைந்து அவரை தொடர்ந்தும் அங்கு தங்கவைத்திருப்பதற்கான தீர்மானத்தை எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்தும் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இணைந்து விசாரணை நடத்தப்பட்டு அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.