
தமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழைவதற்கு சீன உளவு கப்பலான யுவான் வாங் – 6க்கு அனுமதி வழங்கப்படாது என இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
தமது நாட்டின் 200 கடல் மைல் தூரம் வரை பரவியுள்ள நாட்டின் பிரத்தயேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழைய, சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒடிசா பகுதியிலுள்ள APJ அப்துல் கலாம் சோதனை நிலையத்திலிருந்து இந்தியா அனுப்பவுள்ள ஏவுகணை பரிசோதனைகளை கண்காணிப்பதற்காக விசேடமாக அனுப்பப்பட்ட சீனா இராணுவத்தின் உளவு கப்பல் இது என்கின்ற நிலையில், இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என உத்தியோகபூர்வமாக பதியப்பட்டுள்ளது.
பங்களதேஷின் சிட்டகொங்கில் இந்த கப்பலை நங்கூரமிடுவதற்கோ அல்லது இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்த கப்பலை நங்கூரமிடுவதற்கோ அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், அது தமது நாட்டின் அண்மித்த பகுதி என்பதனால், யுவான் வாங் -6 கப்பலினால் கண்காணிக்க முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.
சீனாவின் கப்பலை நங்கூரமிடுவதற்கு, அண்மித்த நாடுகள் அனுமதி வழங்கினால், அது தமது நாட்டிற்கு பிரச்சினையாக அமையும் எனவும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த கப்பலினால் தமது நாட்டின் அண்மித்த கடற்பரப்பிற்குள் வருகைத் தந்து, தமது நாட்டை கண்காணிக்க முடியும் என்பதை தாம் அறிந்துள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
தமது நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்ட.லத்திற்குள் வருகைத் தர ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது என கூறியுள்ள இந்திய அதிகாரிகள், சர்வதேச கடல் பரப்பிலிருந்து கண்காணித்தால் அதனை தடுக்க தம்மால் முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கப்பலின் செயற்பாடுகளை தாம் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும், தமது விண்வெளி கண்காணிப்புகள் அந்த கப்பலை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அத்துடன், தமது ஆளில்லா விமானங்களும் தங்களின் நீண்டதூர கடல்சார் கண்காணிப்பு விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019ம் ஆண்டு சீனாவின் ஆராய்ச்சி கப்பலான சி யான் 1 அந்தமானின் போhட் பிளயரிற்கு அருகில் காணப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்திய கடற்படை அதனை வெளியேற்றியதாக கூறப்படுகின்றது.
சி யான் கப்பலும் ஆராய்ச்சி கப்பல் என்ற போhர்வையில் செயற்படும் உளவு கப்பல் என கருதப்படுகின்றது என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த கப்பல் விவகாரத்தால் இந்திய கடற்படைக்கும், சீனாவிற்கும் இடையில் இராஜதந்திர மோதல் உருவானதாக கூறிய அதிகாரிகள், ஆனால் இந்தியா தனது நிலைப்பாட்டில் என்றுமே உறுதியாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இம்முறை யுவான் வாங் கப்பல் தனது பொருளாதார வலயத்திற்குள் நுழைய முயற்சித்தால்,சி யான் கப்பல் விவகாரத்தில் நடந்துக்கொண்டதை போன்றே இந்தியா நடந்துக்கொள்ளும் எனவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
சீனா கப்பல் எங்கு செல்கின்றது என இதுவரை அறிவிக்கப்படவில்லை என கூறியுள்ள இந்திய அதிகாரிகள், அந்த கப்பல் சர்வதேச கடற்பரப்பிலேயே பயணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளன