வட கொழும்பு – District 306 பி 1 அரிமா சங்கத்தினரால் தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு 15 மட்டக்குழி புனித மேரிஸ் தேவாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது அரிமா சங்கத்தின் இரண்டாவது பிரதி மாவட்ட ஆளுநர் லயன் டபிள்யூ ராஜித ரொட்ரிகோ அவர்களின் தலைமையில் ஏனைய அரிமா சங்க அங்கத்தினர்களின் பங்களிப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தேவையுடையவர்களுக்காக நடாத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் இலவச நீரழிவு பரிசோதனை இரத்தப் பரிசோதனைகள் கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த அரிமா சங்கத்தின் இரண்டாவது பிரதி மாவட்ட ஆளுநர் லயன் ராஜித ரொட்ரிகோ,
எமது அரிமா சங்கம் மூலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரை பல்வேறுபட்ட சமூக சேவைகளை செய்து வருவதோடு இதுபோன்ற இலவச வைத்திய முகாம்கள் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் வைபவங்கள் போன்றவை இந்த மாதம் முழுவதும் செய்வதற்கு நாங்கள் உத்தேசித்து உள்ளோம்.
அந்த வகையில் இன்று நடைபெறுகின்ற இந்த நிகழ்வை தொடர்ந்து வத்தலை நீர் கொழும்பு போன்ற பிரதேசங்களிலும் நாங்கள் இதனை தொடர்ந்து செய்வதற்கு உத்தேசித்து உள்ளோம் ஆகவே தேவையுடையவர்கள் எங்களை தொடர்பு கொண்டு இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.