உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு – காங்கிரஸ் வரவேற்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் ”பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் அல்லாத, பிற உயர் சாதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் சட்டத் திருத்தத்தை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது.

கடந்த மன்மோகன்சிங்கின் அரசு மேற்கொண்ட முயற்சியால் 2010 ஆம் ஆண்டு ஜூலையில் 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த அறிக்கையை சின்ஹோ ஆணையம் சமர்ப்பித்தது.

2014ம் ஆண்டிற்குள் இதற்கான சட்ட திருத்த மசோதா தயாராகி விட்ட நிலையில் அந்த மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டது. மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக தாம் இருந்தபோது, ​​2012ஆம் ஆண்டு, சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட சாதி ரீதியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த தனது நிலைப்பாட்டை மோடி அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *