
நாட்டில் கடந்த சில வருடங்களாக பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் வாகன விபத்துக்களில் பல நூற்றுக்கணக்காணோர் உயிரிழந்து வருவதாக சுகாதார தரப்புக்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான கடந்த சனிக்கிழமை யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மேலதிக சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்
விபத்துக்குள்ளானவர்களின் குடும்பங்கள் வாழ்நாள் சோகங்களையும் கஷ்டங்களையும் சுமக்கின்றார்கள்.
இடம்பெற்றுவரும் விபத்துக்களுக்கு யார் பொறுப்பை ஏற்பது?
1. பொலிசார் ???
2 வாகன உரிமையாளர்கள் ???
3. வாகனச் சாரதிகள்???
இருப்பினும் விபத்தொன்றின் பின்னர் விசாரணைகள் நடைபெறுவதாகவும் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க போவதாகவும் செய்தி வருகின்றமை நகைப்பிற்குரியது.
ஒரு நாள் இரவு பத்து மணிக்கு இவ்வாறான பஸ் ஒன்றில் பயணத்தை ஆரம்பித்தேன். கண் விழித்துப் பார்த்தபோது பஸ் காலை 4 மணியளவில் கொழும்பை அடைந்ததை உறுதிப்படுத்திக் கொண்டேன். இவ்வளவு விரைவாக பயணம் செய்வது மிக ஆபத்தானது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான பாதையில்
1. பல இடங்களில் பாதைகளில் வளைவுகள் காணப்படுகின்றது.
2. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையான பகுதிகளில் கால்நடைகள் எப்போதும் வீதிக்கு வரும் அபாயம் காணப்படுகின்றது.
3. நாய்கள் எப்போதும் வீதியை கடக்கலாம்.
4. பல இடங்களில் குறுகிய அகலத்திலான பாலங்கள் காணப்படுகின்றது.
5. பல நகரங்களை கடந்து செல்ல வேண்டி இருக்கின்றது.
6. திடீரென பிரதான வீதிக்கு இரு பக்கங்களிலும் இருந்து வாகனங்கள் வருகின்ற நிலை காணப்படுகின்றது.
( பலரும் பயணம் முடியும் வரை பதட்டமான மனநிலையில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது)!
ஆகவே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை வாகனத்தை செலுத்துவது இலகுவான காரியம் அல்ல.
அதிலும் 70 km/ hr ற்கு அப்பால் வாகனத்தை செலுத்தினால் வாகனம் விபத்தொன்றில் சிக்கிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
சொகுசு பஸ் விபத்துகளை எவ்வாறு தவிர்க்க முடியும்?????
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்றடைய இரண்டரை மணி நேரம் ( 2 மணி 30 நிமிடங்கள்) தேவை.
வவுனியாவில் இருந்து புத்தளம் சென்றடைய இரண்டரை மணி நேரம் ( 2 மணி 30 நிமிடங்கள்) தேவை.
புத்தளத்தில் இருந்து கொழும்பு சென்றடைய சென்றடைய இரண்டரை மணி நேரம் ( 2 மணி 30 நிமிடங்கள்) தேவை.
ஆகவே பொலிசார் பிரதான நகரங்களை கடக்கும் நேரங்களை அனுமதித்து கண்காணித்தால் போதும்.
வாகன உரிமையாளர்கள் இந்த நீதியை விளங்கிக் கொண்டால் போதும்.
சாரதிகள் தமது உயிர் மற்றும் தங்கள் கைகளில் பல உயிர்கள் தங்கி இருக்கின்றது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.