306 இலங்கை தமிழர்கள் ஆழ்கடலில் நிர்க்கதி

கொழும்பு,நவ 07

ஆட்கடத்தல்காரர்களின் ஏமாற்று வலையில் சிக்கி கனடாவிற்கு கப்பல் மூலம் பயணித்த 306 இலங்கை தமிழர்கள் ஆழ்கடலில் நிர்க்கதியாகியுள்ளனர்.

சட்டவிரோதமாக ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களின் மோசடி வலையமைப்பில் சிக்காதீர்கள் என தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்தாலும், அதையும் மீறிச் சென்று சிக்கிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

அப்படித்தான், தற்போது 306 பேர் தென்சீனக்கடலிற்கு அண்மையாக சிக்கியுள்ளனர்.
இலங்கையர்கள், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்களையும் இணைத்து, 306 பேரை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் படகு மூலம் கனடாவிற்கு அனுப்பி வைத்தனர்.

கப்பலில் பயணிப்பவர்களின் உறவினர்களின் ஆதாரங்களின்படி இந்த கப்பல் சுமார் 2 தொடக்கம் 3 வாரங்களின் முன்னர் பிலிப்பைன்சிலிருந்து புறப்பட்டது. இதற்காக கப்பல் பயணிகள் பிலிப்பைன்சிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எதிர்பார்த்ததை விடவும் மோசமான காலநிலை மற்றும் உணவு, எரிபொருள் தீர்ந்ததால் கப்பல் தற்போது பிலிப்பைன்சிற்கும், வியட்நாமிற்கும் இடைப்பட்ட பகுதியில் நடுக்கடலில் நிற்பதாக, அதில் பயணம் செய்பவர்கள் உதவி கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *