மீனவர்கள் விடுதலை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் அவசர கடிதம்

இந்தியா,நவ 07

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க‌. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க‌. ஸ்டாலின் இன்று (07) மாலை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 5ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியைச் நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க மாண்புமிகு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் உதவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *