
காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்த கருத்து மக்களை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
காணாமலாபோவார்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள அந்த அலுவலகம் நிறுவப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொள்ளாமலேயே இவ்வாறான அறிக்கையை வெளியிடுவது மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்க செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இராணுவத்திடம் தமது பிள்ளைகளை கையளித்ததாக பெற்றோரே தெரிவிக்கின்ற நிலையில் தம்மிடம் எவரும் சரணடையவில்லை என இராணுவமும் இவ்வாறு தெரிவித்தல் மக்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் போய்விடும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
ஆகவே நீதி அமைச்சின் கீழ் உள்ள காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாகவும் பக்கச்சார்பின்றியும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டில் குடியேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த சுமந்திரன், இருப்பினும் நாட்டில் அவர்களுக்கு போதுமான அளவு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.