பெண்களுக்கு கல்வியே பெறுமதிமிக்க சீதனம் – இராஜாங்க அமைச்சர்

தந்தையொருவர் தனது மகளுக்கு வழங்கும் பெறுமதிமிக்க சீதனம் கல்வி மட்டுமேயாகும். அதே போன்று மகனுக்கு வழங்கும் பெறுமதியான சொத்தும் கல்வியேயாகுமென்று, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகள் பம்பலப்பிட்டி இராமநாதன் இந்துக்கல்லூரியில் கடந்த இரு தினங்களாக விமர்சிகையாக நடைபெற்றன.

நாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களிலிருந்தும், போட்டியாளர்களும், கல்வி பணிப்பாளர்களும், அதிபர்களும், துறை சார் ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் இப் போட்டி நிகழ்வுகளில், கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க, மலையக தமிழ்க் கல்வி அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் எஸ். முரளிதரன், முஸ்லீம் பாடசாலைகளின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் அகமத் நசூருதீன், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான சேதுரட்ணம், நரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்லூரி அதிபர் எஸ். மணிவர்மன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளினால் மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இந் நிலையின் மத்தியிலும் அகில இலங்கை தமிழ் மொழித் தின நிகழ்வுகளில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியனவாகும்.
பெருந்திரளானோர் கலந்து கொண்டிருப்பது, போட்டி நிகழ்வுகளை வெகு விமர்சையாக நடாத்துவதற்கு பெரும் உந்து சக்தியாக அமைந்துள்ளது.

எம் மக்களின் கலை, கலாசார விழுமியங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படுவதை, நடைபெறும் நிகழ்வுகளில் காணக்கூடியதாகவுள்ளது. இவ் ஆரோக்கிய நிலை மென் மேலும் தொடரவேண்டும். மேலும் கலை, கலாசார விழுமியங்கள் ஆகியவற்றை மேம்படுத்த, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை என்னால் இயன்றவரை முன்னெடுப்பேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *