பணவீக்கம் காரணமாக இலங்கை மக்களின் விருந்தோம்பல் குணம் குறையவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்
லண்டனில் இடம்பெறும் வேர்ல்ட் டிரவல் மார்க்கெட் கண்காட்சியில் கலந்துகொண்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்
உலகம் பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது, இலங்கையும் அதில் ஒரு பகுதி என நான் தெரிவிப்பேன்.
இலங்கை நெருக்கடியிலிருந்து மீள எழுகின்ற தன்மை உடைய நாடு, எங்களின் முக்கியமான அந்நிய செலாவணி சுற்றுலாப்பயணத்துறையிலிருந்தே வருகின்றது, ஆகவே அது மிகவும் முக்கியமானது.
எங்கள் சனத்தொகையில் 20 வீதம் சுற்றுலாத்துறையை நம்பியுள்ளது. ஆகவே இது எங்களிற்கு மிகவும் முக்கியமானது.
மேலும் இலங்கை ஒருதீவு, அழகான நாடு, பணவீக்கம் காரணமாக எங்களின் விருந்தோம்பல் குணம் மாறவில்லை, இலங்கை மக்களின் விருந்தோம்பல் என்பது எப்போதும் சிறப்பானது, விருந்தினர்களை வரவேற்கும் இலங்கையர்களின் குணம் எப்போதும் சிறப்பானது. ஐரோப்பாவிற்கு வெளியே விருந்தாளிகளை வரவேற்கும் குணம் சிறப்பாக உள்ள நாடு இலங்கை.
நீங்கள் இலங்கைக்கு வந்து செலவிடும் பணம் இலங்கை பொருளாதாரத்திற்கும் உதவும்.
சுற்றுலாப்பயணிகளிற்கு எரிபொருள் அனுமதி அட்டை என்ற ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம், சுற்றுலாப்பயணியொருவர் நாட்டிற்குள் வரும்போது பிரயாண முகவர் அமைப்புகள் விசேட சலுகைகளை பெறுவார்கள், அவர்களிற்கு அது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணியொருவர் வாடகைக்கு கார் ஒன்றை எடுத்து பயன்படுத்த விரும்பினால் அவர்கள் வங்கி மூலம் எரிபொருள் அனுமதிபத்திரத்தை பெற முடியும். கட்டணத்தை டொலரில் செலுத்துவதன் மூலம் அவர்கள் அதனை பெறலாம்.
தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. பிரான்சில் கூட எரிபொருள் வரிசை காணப்படுகின்றது இது உலகில் வழமையான விடயமாக மாறிவருகின்றது.
இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் குறைவானவை, குறிப்பாக ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் அதிகரித்து காணப்படுவதை கருத்தில்கொள்ளும்போது இலங்கைக்கு சுற்றுலாப்பயணியாக வருவதற்கான செலவுகள் குறைவானவை.