பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்: 3 பொலிஸார், அதிபர், ஆசிரியர் கைது

ஹொரணை – மில்லனிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், வகுப்பாசிரியரின் பணத்தை களவாடியதாகத் தெரிவித்து மாணவர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் , மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணை – மில்லனிய பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவரின் பணத்தை களவாடியதாக சந்தேகித்து 5 ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

பாணந்துறை பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

ஆசிரியரின் பையிலிருந்த பணத்தை களவாடியதாகக் குற்றஞ்சாட்டி, மாணவர்கள் சிலரை நூலகத்திற்குள் அழைத்துச் சென்று அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அதிபரால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த மாணவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

பொலிஸ் நிலையத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் ஜீப் வண்டியிலிருந்த 3 மாணவர்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசாரணைகளில் தெரியவந்தது.
இந்நிலையிலேயே மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரும் கைது  செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *