மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

ஹொரணை,நவ 08

ஹொரணை-மில்லனிய பாடசாலையொன்றில் ஐந்தாம் தர மாணவர்களை தாக்கியதோடு, அவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சியமை குறித்து கைது செய்யப்பட்ட பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹொரனை-மில்லனிய பிரதேச பாடசாலையொன்றின் ஐந்தாம் தர மாணவர்கள் மூவரை பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்று, மின்சாரம் பாய்ச்சி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார அமரசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பாடசாலைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், அந்த மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்று மின்சாரம் பாய்ச்சி விசாரணை செய்ததாக பெற்றோரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்று மாணவர்களும் கைவிலங்கிடப்பட்டு, பாடசாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர் ஒருவரின் உடலில் பல தீக்காயங்கள் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

பெண் ஆசிரியை ஒருவரின் பணப்பை திருடப்பட்டதை தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணப்பை திருடப்பட்டதை தொடர்ந்து, பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு மாணவர்களான பன்னிரெண்டு மாணவர்களை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சிலர் பாடசாலையின் நூலக அறையில் வைத்து தாக்கியுள்ளனர்.
சில மாணவர்களை முழந்தாளிட வைத்ததாகவும் மாணவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரினால், மில்லனிய பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் அங்கு வந்துள்ளனர். மூன்று மாணவர்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்றதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *