மஹரகம,நவ 08
மஹரகம- அரவ்வல- பன்னிபிட்டிய வீதியிலுள்ள கடையொன்றில் கூரிய ஆயுதங்களுடன் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல், கடை உரிமையாளரைத் தாக்கி, அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட பெண் காயமடைந்து கடைக்குள் மயங்கி விழுந்த சந்தர்ப்பத்தில், அவர் அணிந்திருந்த தங்க நகை மற்றும் சொத்துக்களை திருடிக்கொண்டு ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டியின் இலக்கம் மற்றும் நிறம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் “சுவசெரிய” அம்பியூலன்ஸ் மூலம் காயமடைந்த பெண்ணை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அரவ்வல பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய இந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.