மலையக தோட்டத் தொழிலாளர்களின் மீது பொலிஸார் அடக்குமுறைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த மக்கள் மீது கை வைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது.
அத்துடன் பெருந்தோட்டத்தில் கம்பனிகளின் அடாவடித்தத்தனம் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இணைந்கொண்டுவந்த நாட்டின் தற்போதைய நெருக்கடி தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பெருந்தோட்டங்களில் நிலவும் தொழில் பிணக்குகளை பொலிஸ் நிலையங்களில் தீர்த்து வைக்கும் கேவலமான நிலைமை இன்று மலையகத்தில் ஏற்பட்டுள்ளது.
தொழில் அமைச்சு, தொழில் ஆணையாளர், தொழிற்சங்கங்கள் இருக்கும் நிலையிலேயே பிரச்சினைகளை பொலிஸ் நிலையங்களில் தீர்த்துவைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஹாலிஎல பிரதேசத்தில் ரொசட் தோட்டத்தில் கணகரட்ணம் என்ற தொழிலாளி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரிகளினால் தாக்கப்பட்டுள்ளார்.
அவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் அராஜகமாகவே அமைந்துள்ளது.
பொலிஸ் நிலையங்களுக்கு யார் இவ்வாறான அதிகாரங்களை வழங்கியது. இவர்களால் எப்படி தொழிற்சங்க பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
களவு செய்பவர்கள், கொலை செய்பவர்கள் மற்றும் கசிப்பு தொழில் குற்றவாளிகள் உள்ளிட்டோரை கைது செய்யாது அப்பாவிகளை தாக்கும் அளவுக்கு பொலிஸாருக்கு யார் அதிகாரத்தை வழங்கியது.
அவ்வாறு அதிகாரத்தை வழங்க முடியாது. இதனால் ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எமது பெருந்தோட்ட மக்களை மிருகங்களை போன்று நடத்துகின்றனர். ஏன் இந்த நாட்டில் 200 வருடமாக வாழும் மலையக மக்களை தேசிய இனமாக பிரகடனப்படுத்தவில்லை.
மலையக பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி கேள்விக்குறியாகவே உள்ளது. அங்கு தமிழர்களை நியமிக்க வேண்டும்.
மலையக பொலிஸ் நிலையங்களில் மலையக மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களும் ஜெனிவா போக வேண்டி வரும். மலையக மக்களுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு செல்வர். மாகாணசபைகள் இயங்காமல் இருப்பதால் அங்கு பாடசாலைகள் முறையாக கண்காணிக்கப்படுவதில்லை.
அதேபோன்று பெருந்தோட்ட கம்பனிகள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த மக்கள் வெயில், மழையில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. அதனால் பெருந்தோட்ட மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.