
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் உறவினரும், முன்னாள் பிரதி அமைச்சரும், மூத்த நடிகருமான ஜீவன் குமாரதுங்க இயக்கிய ‘ஜீவா’ திரைப்படத்துக்கு திலினி பிரியமாலி, நிதியுதவி வழங்கியமை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
ஜீவன் குமாரதுங்க, அவரது மனைவி ஷெரின் குமாரதுங்க ஆகியோர், கடந்த சனிக்கிழமை சீ.ஐ.டிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதோடு, பிரபல கலைஞர் சங்கீதா வீரரத்னவிடம் திங்கட்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் சீ.ஐ.டியினரால் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
சங்கீதா மற்றும் ஜீவன் ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து ‘ஜீவா’ படத்தை திலினி தயாரித்துள்ளார்.
திலினி மோசடியாக சம்பாதித்த பணத்தினால் கலைஞர்களுக்குச் செலவிடப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.