வியட்நாமிய மீட்புக் கப்பல் ஒன்று ஜப்பானியக் கப்பலுடன் இணைந்து அனர்த்தத்துக்கு உள்ளான படகில் பயணித்த 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களை செவ்வாய்க்கிழமை கரைக்கு அழைத்து வந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.
வியட்நாமில் இருந்து வரும் செய்திகளின்படி, கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு கப்பல் ஒன்று இவர்களை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் ஜப்பானிய சரக்குக் கப்பலான ஹீலியோஸ் லீடர், பாதிக்கப்பட்ட கப்பலை அணுகி, 305 இலங்கை குடிமக்கள் மற்றும் மாலுமிகளை கப்பலில் ஏற்றிக்கொண்டு, வியட்நாமிய கடலோரக் காவல்படையினரிடம் சென்றது.
அங்கு வியட்நாமிய படையினர், ஹெரியோஸ் லீடர் கப்பலில் வந்த 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை பொறுப்பேற்றனர்.
இதேவேளை இந்த இலங்கையர்கள், வானூர்தி மூலம் மியன்மாருக்கு சென்று அங்கிருந்து படகு மூலம் கனடாவுக்கு செல்லும்போதே அவர்களின் படகு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்தநிலையில் குறித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கடல் மார்க்கமாக படகுகள் மூலம் வேறு நாடுகளுக்குள் செல்ல மேற்கொள்ளும் முயற்சி மிகுந்த ஆபத்து நிறைந்ததும் பயங்கரமானதுமாகும்.
எத்தனையோ படகுகள் கடலில் மூழ்கி பலர் இற்றைவரையும் காணாமல் போயுள்ளனர் சிலர் தங்கள் உயிர்களையும் இழந்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் பயணம் செய்பவர்கள் அந்நாட்டில் வசிக்கவோ, தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளவோ இடமளிக்கப்பட மாட்டார்கள்.
அத்தோடு இவ்வாறான சட்டவிரோதமான முயற்சியில் வேறு நாடுகளுக்குள் செல்ல முயற்சிப்பவர்கள் சட்டரீதியாக புலம்பெயர்வதற்கான ஏதேனும் வாய்ப்பையும் கூட சுயமாக இழந்து விடுவர். அந்தளவுக்கு ஒவ்வொரு நாட்டினுடைய சட்ட ஏற்பாடுகள் வலுவாக இருக்கும்.
இது தொடர்பில் மக்கள் விழிப்புடனும் முன் அவதானத்துடனும் செயற்பட வேண்டும். மோசடிக்காரர்களை நம்பி ஏமாந்து விடவோ, அதனால் பாதிக்கப்படவோ கூடாது.