தனுஷ்க குணதிலக்க வழக்கை அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதி

பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (9) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பான செய்திகளை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சிட்னி நீதவான் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணொளி தொழில்நுட்பத்தினூடாக தனுஷ்க குணதிலக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இது தொடர்பான வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, தனுஷ்க சார்பில் புதிய பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கலாநிதி சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *