அராலி கிழக்கு பாலச் சந்தியில் இருந்து அராலித் துறைக்கு செல்லும் பிரதான வீதியில், வீதி அகலிப்பு நடவடிக்கையானது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இதனால் குறித்த வீதியால் பயணம் செய்யும் மக்கள் உயிராபத்தின் மத்தியில் பயணிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.
இது தொடர்பில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்கள் யாழ். வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபையின் பிரதம பொறியியலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
அராலி கிழக்கு பாலச் சந்தியில் இருந்து அராலித் துறைக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பானது
மேற்படி விடயம் தொடர்பாக, கணபதீஸ்வரர் ஆறங்காவலர் சபையினரின் 04.11.2022 ஆம் திகதிய கோரிக்கை தொடர்பானது,
அராலி கிழக்கு பாலச்சந்தியில் இருந்து அராலித்துறைக்கு செல்லும் பிரதான வீதி அகலிப்புக்காக, வீதியின் ஒரு பகுதி வெட்டப்பட்டுள்ளமையால் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து சென்று வருவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் பெரும் விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது.
அத்துடன் வீதியானது அகலிப்புக்காக வெட்டப்பட்டு குன்றும் குழியுமாக காணப்படுகின்றமையால் போக்குவரத்துச் செய்வோர் பெரும் உயிராபத்தான விபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் குறித்த வீதியில் உள்ள Culvert களும் உடைந்து காணப்படுகின்றது. இவ் வீதி வயல்வெளிகளினூடாக செல்வதால் மழைகாலங்களில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆகையால் குறித்த பகுதி மக்களின் போக்குவரத்து நலனில் அக்கறைகொண்டு தாங்கள் களவிஜயம் மேற்கொண்டு தொழில்நுட்ப ரீதியாக பொருத்தமான நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என குறிப்பிடப்பட்டுள்ளது.