தொடரும் கனமழையால் தவிக்கும் முல்லை மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் வட்டுவாகல் மற்றும் சாலை கடல் நீர் ஏரிகள் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை வெள்ளம் காரணமாக நந்திக்கடல் நீர் ஏரி நிரம்பியுள்ளதால் வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக வெள்ளநீர் வழிந்தோடிவருவதனால் பாலம் ஊடாக பயணிக்கும் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

அத்துடன், சாலைக்கடல் நீர் ஏரியும் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள். இரட்டைவாய்க்கால் சாலை வீதியில் மழைவெள்ளம் நிரம்பி காணப்படுகின்றது சுமார் 5 கீலோமீற்றர் தூரத்திற்கு வெள்ள நீர் காணப்படுவதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

வலைஞர் மடம்,அம்பலவன் பொக்கணை,மாத்தளன் மக்களின் போக்குவரத்து மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் தாள் நில பிரதேசங்களை அண்டிய விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. விவாசய செய்கைக்கு செல்லும் மூன்று பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் வீதிகளில் மழைவெள்ளம் காணப்படுவதால் வட்டுவாகல் பாலத்தினையும் சாலை முகத்துவாரத்தினையும் உடனடியாக வெட்டிவிடு மாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். வெட்டினால்தான் வீச்சுவலை தொழில் செய்யமுடியும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவவேளை வட்டுவாகல் கடல் வெட்டுவது தொடர்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கொண்ட குழுவின் தீர்மானத்திற்கு அமையவே வெட்டப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், அங்கு தொடர்ச்சியாக மழைபெய்யுமாக இருந்தால் வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் மாத்தளன்,அம்பலவன் பொக்களை பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *