யாழ்,ஆதீனத்தின் பிரதம பேராயரின் ஆணையாளராக சந்திரசேகரன் நியமனம்!

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதம பேராயரின் விசேட ஆணையாளராக திருச்சி – தஞ்சாவூர் ஆதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி D.சந்திரசேகரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுவரை பதவி நிலையில் இருந்த பேராயர் அதி வணக்கத்துக்குரிய டானியல் தியாகராஜா ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய பேராயர் நியமிக்கப்படும் வரை இவர் விசேட ஆணையாளராக செயற்படுவார்.

இதற்கான நியமனக்கடிதம் இன்று பிரதம பேராயர் மேன்மைதகு அதி வணக்கத்துக்குரிய கலாநிதி A தர்மராஜ் ரசாலம் அவர்களால் வழக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திருச்சபையானது 24 ஆதீனங்களைக் கொண்டதுடன், இந்தியாவை தலைமையாகக் கொண்டுள்ளது. அவ் ஆதீனங்களில் ஒன்று இலங்கையில் யாழ்ப்பாண ஆதீனமாக உள்ளது.

2006ம் ஆண்டு புதிய பேராயராக நியமனம் பெற்ற அதி வணக்கத்துக்குரிய டானியல் தியாகராஜா தனது 67வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

பேராயர்களின் ஒய்வு வயதாக 67 வயதாகும். அந்த வகையில் நேற்றைய தினம் அவர் ஓய்வினை பெற்றார். இந்த நிலையில் ஆதீனத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரதம பேராயரின் விசேட ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் புதிய பேராயருக்கான தேர்வில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முதல்வரும், ஆதீனத்தில் செயலாளருமான அருட் கலாநிதி D S சொலமன் மற்றும் அருட்கலாநிதி V பத்மதயாளன் ஆகியோர் தெரிவு பட்டியலிற்கு தெரிவாகினர்.

அவர்களிக்கான நேர்முக தெரிவு மற்றும் நியமனத்திற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் புதிய பேராயர் நியமிக்கப்படும் வரை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதம பேராயரின் ஆணையாளராக திருச்சி – தஞ்சாவூர் ஆதீனத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி D.சந்திரசேகரன் கடமையில் ஈடுபடுவார்.

நத்தார் பண்டிகைக்கு முன்பதாக புதிய பேராயர் நியமிக்கப்படுவார் என நம்பப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *