உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து ராணுவம் வெளியேறுமாறு ரஷியா உத்தரவு

கீவ்,நவ 09

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 9 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.

இந்த சூழலில் உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டி இருந்தது.

அந்த நகரத்தில் 3 லட்சம் பேர் இருப்பதாக கருதப்படும் நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகவும், இது உக்ரைனின் நாசவேலை என்றும் மின்சாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் ரஷிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் ரஷிய படையினர் 1.5 கிமீ மின் கம்பிகளை அகற்றி விட்டதாகவும், உக்ரைன் படையினர் குற்றம் சாட்டினர். அந்தப் பகுதியை மீண்டும் உக்ரைன் கைப்பற்றும் வரை மின்சாரம் திரும்ப வராது என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு ரஷியா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போரின் குறிப்பிடத்தக்க பின்வாங்கல் மற்றும் சாத்தியமான திருப்புமுனையாகும். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஜெனரல் செர்ஜி சுரோவிகின், “நாங்கள் எங்கள் வீரர்களின் உயிரையும் எங்கள் பிரிவுகளின் சண்டை திறனையும் காப்பாற்றுவோம். அவற்றை வலது (மேற்கு) கரையில் வைத்திருப்பது பயனற்றது. அவர்களில் சிலர் மற்ற முனைகளில் பயன்படுத்தப்படலாம்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *