
எதிர்ப்புகளுக்கு தூபமிடாது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒத்துழையுங்கள் என அரசியல் கைதிகளின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (09) தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்களால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அலசரகால சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பேன்றவற்றின் கீழ் 10 முதல் 27 ஆண்டுகளாக சிறைச்சாலைகளில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு கரிசனை கொள்ள தொடங்கியுள்ளது. இதனை ஐநா உட்பட அமெரிக்கா, மற்றும் ஐராப்பிய ஒன்றியமும் வரவேற்றுள்ளது.
இன்னும் பல சர்வதேச மனிதநேய அமைப்புகள் ஊக்கப்படுத்தியுள்ளன. இவ்வாறிருக்க, கைதிகள் விடயம் கையாளப்படுவதற்கு எமது அழுத்தங்கள் தான் காரணமென தமிழ் அரசியல் தரப்புகள் பொதுவாக பேசிக்கொள்கின்றனர். புலம்பெயர் அமைப்புகளும் தமது செக்மேற் தான் வேலை செய்கிறது என சொல்கிறார்கள்.
ஐநாவினதும் மேற்குலகினதும் தீண்டுதலே அரசை செயலாற்றும் பரப்புக்கு இட்டு சென்றுள்ளது என ஜெனீவா சென்று திரும்பும் தரப்பு சான்று பகிர்கிறது. எது எவ்வாறு இருப்பினும், யார் குற்றியென்றாலும் அரசியானால் போதுமென்று பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிகள் விடுதலையை அவாவி நிற்கின்றார்கள்.
குரவற்றவர்களின் குரல் அமைப்பு கொடுஞ்சிறை அனுபவித்து கொண்டிருப்போரின் அசல் அடையாளமாக, நடைமுறை சாத்தியமான வழிகளில் எல்லாம் முயற்சித்து குரலுயர்த்தி செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இங்கு, அரசியல் கைதிகள் மீதான அரசின் கரிசனையை, அரசியல் தேவைக்கானதென்றோ. அழுத்தத்தினால் தானென்றோ யாரும் ஆராய்ந்து கொண்டிக்க வேண்டியதில்லை. மாறாக இந்த மனிதாபிமான பணியை இதற்கு மேலும் அர்த்தப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று சுமார் நாற்பதுக்கும் குறைவான மீதமுள்ள அரசியற் கைதிகளையும் சிறைமீட்க தம்மாலான ஒத்துழைப்புகளை நல்குவதே தர்மமாகும்.
நீண்ட நெடுஞ்சிறை இருக்கும் இந்த அடகு வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளின் உயிர்ப்புடனான சிறை மீழ்விற்கு இனம், மதம், மொழி, கட்சி, கொள்கை, கோட்பாடு தாண்டி சிந்தித்து கரமசைக்க முடியுமானால் அதுவே மெய்யான மனித நேயமாக இருக்கமுடியும்.
காலம் காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வகை வேறுபடுத்தாது பொது அரசியல் தீர்மானமொன்றினை மேற்கொண்டு அவர்கள் தம் குடும்ப உறவுகளுடன் சேர்ந்து வாழ சந்தர்ப்பமளிக்க வேண்டும். இந்த மனிதாபிமான அறைகூவலை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும், தனிப்பட்ட முறையிலும் பொதுவெளி வேண்டுகைகள் மூலமாகவும் தமிழ் அரசியல் கைதிகள் பலதடவைகள். வலியுறுத்தி வந்துள்ளார்கள்.
ஆனபோதும், இதுவரை அவர்கள் கூட்டான ஒரு தீர்மானத்துடன் அரசை அணுகி பேச்சு மேசையொன்றை கோரியிருக்கவில்லை. போனது போகட்டும், இப்போதும் கூட காலம் குணங்கெட்டுவிடவில்லை. அவசரம் தீர்க்கப்பட வேண்டிய ஒவ்வொரு வேலைத்திட்டங்களுக்கேனும் பலமான ஒற்றுமை சக்தியாக வெளிப்பட்டு அரசிடம் சென்று உயர்மட்ட பேச்சுக்களுக்கு வற்புறுத்துங்கள். நிச்சயமாக நற் பெறுப்பேறுகள் கை கூடிவரலாம்.
தற்போது சிறையிலுள்ளவர்கள் எவரும் ஆயுதப் போராட்டத்திற்கு நாமமிட்டவர்கள் அல்லர். மாறாக, கருவிகளாக பயன்படுத்தப்பட்ட அப்பாவிகள் என்பதை புரிந்துகொண்டு இவ்வாறானவர்களின் துயரத்தை வைத்து ஆதாயம் தேடாது சிறை மீள கரம் கோர்த்து செயலாற்ற வேண்டும்.
இங்கே பிரதானமாக புலம்பெயர் தமிழ் மக்களும், முதலீட்டாளர்களும், அமைப்புகளும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கன்னை பிரிந்து நின்று கருமமாற்ற முயலாது, பொருளாதார நலிவு கண்டு இடர்படுகின்ற இலங்கை தேசத்திற்கு ஒருமித்த ஒரே கருத்தாக இந்த மனிதநேய விடுதலை விவகாரத்தை முன்னிறுத்தி, ஒன்றுபட்ட இலங்கை மக்களாக தேசத்தை கட்டியைழுப்புவதற்கு நல்லிணக்கப் புள்ளியிடுமாறு கோர முடியும்.
நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு தமிழ் அரசியல் கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். அதற்கடுத்து வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதினாறு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்து விடுவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முதற்கட்டமாக எட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதுமட்டுமல்ல, எதிர்வரும் தைப்பொங்கல் தினப் பாண்டிகைக்கு முன்னதாக மேலும் ஒரு தொகுதி அரசியற்கைதிகளுக்கு பொதுன்னிப்பு வழங்கவதற்கு உத்தேசித்துள்ளதாக கூறியுள்ளார்.
எனவே, அரசியல் கைதிகளது விடுதலை விடயத்திற்கு முழுமையான தீர்வுகான இது முக்கியமான காலமாகும் என்பதை கவனத்திற் கொண்டு எதிர்ப்புகளுக்கு தூபமிடாத வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அனைத்து தரப்பினரதும் கடமையாகும் என்ற விடயத்தை கோடிட்டு கூற கடமைப்படுகிறோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.