இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்? இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

அடிலெய்டு,நவ 10

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அடிலெய்டு ஓவலில் அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் கோதாவில் குதிக்கின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது. தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் கால்பதித்தது.

வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை துவம்சம் செய்யும் சூர்யகுமார் யாதவின் பிரமாதமான ஷாட்டுகள் பரவசமூட்டுகின்றன. இதே போல் திரில்லிங்கான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 82 ரன்கள் விளாசி வெற்றியை தேடித் தந்ததும் சிலிர்க்க வைத்தது. இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பேட்டிங் மீது இமாலய எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோலி இன்னும் 42 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 4 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நேர்த்தியான தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *