
களுத்துறை மில்லேனிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களை பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்று மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய ஐவரிடம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்தியுள்ளது.
பெற்றோரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பாடசாலை அதிபர், பிரதி அதிபர் மற்றும் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோரிடமே 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர் ஒருவரின் பணப்பையைக் காணவில்லை என அதிபர் உட்பட பல ஆசிரியர்கள் கடந்த 2ஆம் திகதி 12 மாணவர்களை பாடசாலை நூலக அறையில் அடைத்து மண்டியிட வைத்து கடுமையாகத் தண்டித்ததுடன் திருட்டு தொடர்பில் பொலிஸாருக்கு அதிபர் தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூன்று மாணவர்களை பொலிஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்று மின்சாரம் பாய்ச்சி கொடூரமாகத் தாக்கி விசாரணைக்குட்படுத்தியுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து சந்தேகநபர்கள் ஐவரும் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது அதிபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் பிரதி அதிபர் மற்றும் பொலிஸ் ஜீப்பின் சாரதி ஆகியோரை பிணையில் விடுவிக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
காயமடைந்த மூன்று மாணவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.