இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிக்கையில்:
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் முன்னரை விட தற்போது போதைப்பொருள் பாவனை, விற்பனை அதிகாரித்துள்ளது. பாதுகாப்பு பிரிவினரால் தொன் கணக்கில் போதைப்பொருள் கைப்பற்றப்படுகிறது. ஆனால் அவை மீண்டும் வெளியே செல்கின்றன. இது பற்றி நாம் ஆராய்ந்து வருகின்றோம். ஆகவே வழக்கு நடவடிக்கைக்கு தேவையான போதைப்பொருளை மட்டும் வைத்துக்கொண்டு மிகுதியை இல்லாமல் செய்வது சிறந்தது.
இன்றைய நவீன காலத்தில் ,ஈஸி காஸ் முறையில் போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுகிறது. ஈஸி காஸ் மூலம் பணம் செலுத்தப்படுகிறது. பின்னர் இந்த வீதியில் போதைப் பொருள் வைக்கப்பட்டுள்ளது,அதனை எடுத்துக்கொள்ளுங்கள் என்று செய்திகள் பரிமாற்றப்பட்டு வியாபாரம் துல்லியமாக நடைபெறுகிறது.
நாட்டில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இது தவிர பிரபல்ய பாடசாலை மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகியுள்ளனர்.
இது பற்றி பாடசாலை ஆசியர்கள், அதிபர்கள் எமக்கு மறைக்கின்றனர், பாடசாலையின் பெயருக்கு அவதூறு வந்துவிடும் என்பதற்காக தகவல்கள் மறைக்கப்படுகின்றன. ஆனால் நாம் எமது பணிகளை தொடர்ந்து செய்கின்றோம் என்றார்.