
காரைநகரின் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பிலான திட்ட முன்மொழிவு அறிக்கை காரைநகர் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரனால் யாழ். நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் காரைநகரின் நிலைபேறான அபிவிருத்தி சம்மந்தமாக காரைநகர் பிரதேச சபையின் ஐவர் அடங்கிய குழு கடந்த மாதம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. இதன்போதே குறித்த திட்ட மொழிவு அறிக்கை தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த திட்ட மொழிவு அறிக்கையில்,
காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையிலான மேம்பாலம் துறைமுகப் பகுதியில் இருந்து அமைத்தல், பொன்னாலை பாலத்தில் யாழில் இருந்து வரும்போது வலது பக்கமாக உள்ள வேணன் அணைக்கட்டை உல்லாச பயணிகளுக்கு கவரும் வண்ணம் வீதியாக மாற்றி கசூரினா சுற்றுலா மையம் ஊடாக நீலங்காடு வரை காப்பெற் வீதியாக செப்பனிடல்
காரைநகர் சுற்றுவட்ட வீதியை அகலப்படுத்தி காப்பெற் வீதியாக செப்பனிடல். மழைநீர் சேமிப்பதற்கும் வெளியேற்றுவதற்குமான திட்டத்தை தயாரித்தல்
1990 ஆம் ஆண்டுக்கு முன்பு துறைமுகத்திலிருந்து எழுவைதீவு நயினாதீவு நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து நடைபெற்றது. தற்போது சேவைகள் நடைபெறுவதில்லை மீண்டும் இடம்பெற வேண்டும்
இங்கே கிடைக்கின்ற பனம் பொருள்கள், கடல் உணவுகள் போன்றவற்றை சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அதனுடன் சார்ந்த சந்தைப்படுத்துவதற்கான வசதிகள், தொழிற்சாலைகள் நிறுவி நவீன தொழிற் பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி எமது பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தல்
வடமாகாண சுற்றுலாத்துறை அமைச்சினால் கசூரினா சுற்றுலாமையத்துக்காக வரையப்பட்ட திட்டங்களை விரைந்து முடிவுறுத்துவதற்கு மேலதிக நிதியை விடுவித்தல்
சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக கரைநகர் வெளிச்சவீட்டை பிரதேச சபைக்கு கையளிப்பதுடன் அதனை புனருத்தான செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பொருத்தமான இடம் இனம் காணப்பட்டு கேபிள் கார் அமைத்தல், எமக்கு சொந்தமான காணியில் யாத்திரிகர் விடுதியை அமைத்தல்
சூரிய மின் உற்பத்தி நிலையங்களையும் காற்றாலை உற்பத்தி நிலையங்களையும் அமைத்தல்
போன்ற விடயங்கள் உள்ளடக்கி திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .