
இந்த நாட்டிலே தொல்லியல் துறையானது பௌத்த மேலாதிக்கத்துடன் இயங்குவதோடு. மத, இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எதேட்சாதிகார சிந்தனையுடன் செயற்படுகின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.
உரிய அனுமதி பெறப்பட்டு உகந்தை மலையில் நிறுவப்படும் முருகன் சிலை பணிகளை திடீரென தொல்லியல் துறை நிறுத்தியமை தொடர்பில் கண்டனம் வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உகந்தை மலை முருகன் ஆலயமானது சுமார் 2000 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த தலமாக இருப்பதுடன் இந்துக்களின் வழிபாட்டில் மிகவும் முக்கிய அங்கம் வகிக்கின்றது. கதிர்காமத்துடன் மிக நெருங்கிய பிணைப்பினைக் கொண்டு வடபுறம் இருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை வரும் அடியவர்களை அரவணைக்கும் புண்ணியத் தலமாகும்.
கடந்த 2021ம் ஆண்டு இவ்வாலயத்தின் வள்ளியம்மன் மலையில் முருகன் சிலையொன்றினை அமைப்பதற்கு தொல்லியல் துறையில் இருந்து அனுமதி பெறப்பட்டிருந்ததோடு அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன ஆனால் தற்போது கொழும்பில் இருந்து வருகை தந்த தொல்லியல் பிரிவினர் இத் திருப்பணி வேலைகளை நிறுத்துவதானது இந்துக்களின் மத சுதந்திரத்தையும், வழிபாட்டினையும் வன்பறிப்புக்குள்ளாக்குகின்ற விடயமாகவே இருக்கின்றது.
ஒரு மாகாணத்தின், மாவட்டத்தின் தொல்லியல் பிரிவு வழங்கிய அனுமதியை கொழும்பில் இருந்து வந்து தடுப்பதானது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம்.
இந்த நாட்டிலே தொல்லியல் துறையானது பௌத்த மேலாதிக்கத்துடன் இயங்கும் துறையாகவே இருப்பதோடு. மத, இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எதேட்சாதிகார சிந்தனையுடன் செயற்படுகின்றது.
1881ம் ஆண்டு இலங்கையின் குடிசன மதிப்பீட்டின் படி கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 58.96 வீதமாகவும், சிங்களவர்கள் 4.6 வீதமாகவுமே இருந்தார்கள் ஆனால் இவ்வாறான துறைகளின் செயற்பாடுகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், இன அழிப்புகள் என்பவற்றின் மூலம் இரண்டு இனங்களினாலும் தமிழர்களின் இருப்பு பறிக்கப்பட்டது. இறுதியில் 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம் தமிழர்கள் 39.7 வீதமாகவும் சிங்களவர்கள் 23.15 வீதமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
தற்போது கிழக்கில் தமிழர்கள் வாழ முடியாது என்ற நிலையை இந்தத் துறைகளினூடாக மிகவும் நாசுக்காக பேரினவாதம் தோற்றுவித்து வருகின்றது.
எனவே ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு நீதியை நிலைநாட்டுவதற்காகச் செயற்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கிழக்கிலே இந்து மக்களின் வழிபாட்டுத் தலங்களையும், தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் சிங்கள மயமாக்கும் இவ்வாறான துறைகளின் செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எனவே எதிர்வரும் கதிர்காமத் தீர்த்தத்திற்கிடையில் உகந்தை மலை விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து, தொல்லியல் துறையின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் நாம் மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.