
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், செல்லுபடியாகும் வீசாவை அவர் வைத்துள்ளாரா என்பதை உடனடியாக விசாரித்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, இன்றைய தினம்(10) உத்தரவிட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டார் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கே மேற்குறிப்பிட்ட உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, நீதிமன்றில் தெரிவித்த உண்மைகளை கருத்திற் கொண்ட பிரதான நீதவான், குறித்த வழக்கை டிசெம்பர் 15ஆம் திகதி அழைப்பதற்கு தீர்மானித்துடன் விசாரணை அறிக்கையை அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.