சீன கரிம உரத்திற்கு செலுத்திய பணம் தொடர்பில் கலந்துரையாடல்

கொழும்பு,நவ 10

2021ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீன கரிம உரக் கப்பலுக்கு இலங்கையினால் செலுத்தப்பட்ட 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இராஜதந்திர ரீதியில் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (10) விவசாய அமைச்சில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் நடைபெற்றது.

இலங்கைக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளுக்கு உரம் ஏற்றுமதியில் இடையூறு ஏற்படாத வகையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சர் சப்ரியின் ஆதரவை வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். .

அதற்கமைவாக, இது தொடர்பான கலந்துரையாடலொன்று வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் விவசாய அமைச்சர்கள் தலைமையில் ஏனைய அனைத்து பங்குதாரர்கள் உட்பட இன்று இடம்பெற்றது.
அமைச்சர் அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, இலங்கை தர நிர்ணய பணியகம், தேசிய உர செயலகம், இரு அரச உர நிறுவனங்கள் மற்றும் அமைச்சின் சட்ட திணைக்கள அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

சீன கரிம உரக் கப்பல் தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வெளிவிவகார அமைச்சின் விசேட அதிகாரி ஒருவரை நியமித்த வெளிவிவகார அமைச்சர், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இராஜதந்திர மட்டத்தில் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவிய அமைச்சர் அலி சப்ரிக்கு அமைச்சர் அமரவீர நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *