
சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு படகில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
படகு ஆபத்தில் சிக்கியபோது அதில் இருந்த தொழிலாளர்கள் தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மியான்மரின் மீன்பிடிக் கப்பல் கடந்த திங்கட்கிழமை வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் கடற்பரப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கரை ஒதுங்கியது.
வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களை தொடர்பு கொண்டு குறித்த கப்பல் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொண்டதுடன், குறித்த கப்பலுக்கு அருகில் பயணித்த ஜப்பானிய கப்பல் மூலம் இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டபோது கப்பலில் இருந்த ஊழியர்கள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.