BREAKING NEWS – ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட அறுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், நளினி உள்ளிட்டவர்கள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் கடந்த மே 18-ஆம் திகதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

இந்நிலையில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதன்போதே, நளினி உள்ளிட்ட அறுவரையும் விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆறு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த போதிலும் இந்த வழக்கில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று கூறி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *