
நாட்டில் பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோரைக் கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் நூறு பேரளவிலேயே போதைப் பொருள் வியாபாரிகளாக உள்ளதுடன், விநியோக நடவடிக்கைகளில் முன்னூறு பேரே ஈடுபட்டுள்ளனர்.ஆனால்,ஐந்து இலட்சம் பேர், போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
போதைப்பொருள் வியாபாரிகளை இல்லாதொழித்து, விநியோக வலையமைப்பை சிதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையாளர்களன்றி போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமென்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பேரிழப்பை பாடசாலை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.