கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜ வெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி56 ரக துப்பாக்கி ஒன்றுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் ரஜ வெவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் அக்போபுர பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தாகவும் தெரியவதுள்ளது.
ரி56 துப்பாக்கியின் பாகங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புதிய துப்பாக்கி மற்றும் ரி56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்பட்ட 21 தோட்டாக்களுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கியை பயன்படுத்தி இரவு வேளைகளில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில். சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.