
இலங்கைக்கான கடனை மறுசீரமைக்குமாறு சீனாவை வலியுறுத்தி, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய தமது கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அதாவது, தமது கட்சியின் சீதாவக்க பிரதேச சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாரச்சி நடத்திய இந்த போராட்டத்திற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
எங்கள் கட்சி இராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது. அத்துடன், அரசாங்கம் சீனாவுடனான கடன் விவகாரங்களை இராஜதந்திர உறவுகளின் மூலம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ரங்கே பண்டார கூறினார்.
கடன் மறுசீரமைப்பு என்பது நிதி அமைச்சரின் பிரச்சினையே தவிர பிரதேச சபை உறுப்பினரின் பிரச்சினை அல்ல.
எனவே உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியாமல் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் கட்சி நிர்வாக சபை நடவடிக்கை எடுக்கும் எனவும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தமது கடனை மறுசீரமைக்குமாறு சீனாவை வலியுறுத்தி, சீதாவக்க பிரதேச சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாரச்சி கடந்த வெள்ளிக்கிழமை சீனத் தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.