
உலக வங்கியின் கடனுதவியின் கீழ், ஒரு தொகை யூரியா உரம் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வரவுள்ள குறித்த கப்பலில் 22,000 மெற்றிக் டன் யூரியா கொண்டுவரப்படுவதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பெரும்போகத்திற்கான நெல் மற்றும் சோளம் செய்கைக்காக யூரியா உர கொள்வனவிற்காக 105 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்தது.
குறித்த கடன் திட்டத்தின் கீழ் இரண்டாவது தொகுதியே நாளைய தினம் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளது.
இதற்கு முன்னர் 13,000 மெற்றிக் டன் யூரியா உரம் நாட்டிக்குக் கிடைக்கப்பெற்றிருந்தது.
யூரியா உரத்தின் முதல் தொகுதி சீனாவில் இருந்தும், இரண்டாவது தொகுதி மலேசியாவில் இருந்தும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.
566 கமநல சேவை மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு இந்த யூரியா உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.