யால,நவ 13
யால தேசிய பூங்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்து வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவித்தமைக்காக நீதிமன்றில் உள்ள 7 சொகுசு வாகனங்களை விடுவிக்குமாறு வாகன உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவை திஸ்ஸமஹாராம நீதவானும் மாவட்ட நீதிபதியுமான தரிந்து சமிர சில்வா நிராகரித்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 10 சந்தேக நபர்களும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 09 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
யால தேசிய பூங்காவிற்குள் கடந்த 22ஆம் திகதி 35 சொகுசு வாகனங்களில் சுமார் 80 பேர் நுழைந்து சட்டவிரோதமான முறையிலும் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் பயணித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியதையடுத்து வனவிலங்கு அதிகாரிகள் கடந்த 26ஆம் திகதி 07 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் 10 சந்தேகநபர்கள் திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே குறித்த வழக்கு தொடர்பில், நீதிமன்றில் உள்ள 7 சொகுசு வாகனங்களையும் விடுவிக்குமாறு வாகன உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.