
இரத்தினபுரி, ஹிதெல்லன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அடித்து மரத்தில் கட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிதெல்லன பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் (12) அதிகாலை இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்திருந்தது.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூலம் அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் பாதிக்கப்பட்ட நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இருப்பினும் படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதுடைய குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், பெண்ணின் கணவர் அவரை அடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணின் கணவரான 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,குறித்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது