திலினி பிரியமாலி மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, கைப்பேசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரிடம் 40 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடியுடன் தொடர்புடையதாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன ஊடாக குறித்த வர்த்தகர் திலினி பிரியமாலியை கடந்த மே மாதம் அறிந்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமக்கு 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஐ-போன் 13 ப்ரோ மெக்ஸ் ரக கைப்பேசி ஒன்று தேவைப்படுவதாக ஜானகி சிறிவர்தன மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்கு அமைய, குறித்த வர்த்தகர் கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

குறித்த கைப்பேசியை ஜானகி சிறிவர்தனவிடம் கையளிக்கும் சந்தர்ப்பத்தில், திலினி பிரியமாலி மற்றுமொரு நபருடன் டொலர் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்தமையை குறித்த வர்த்தகர் அவதானித்துள்ளார்.

இதன்போது, வர்த்தகத்திற்கு டொலர் தேவையேற்படின் திலினி பிரியமாலியை அணுக முடியும் என ஜானகி சிறிவர்தன குறித்த வர்த்தகருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

6 வருடகாலமாக திலினி பிரியமாலியை தாம் அறிந்துள்ளதாகவும், அவருடனான வர்த்தகம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜானகி சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த வர்த்தகர் 40 மில்லியன் ரூபாவை திலினி பிரியமாலியுடனான வர்த்தகத்திற்கு வழங்கியுள்ளார்.

குறித்த 40 மில்லியன் ரூபாவுக்கான டொலரை மே மாதம் 9ஆம் திகதி தருவதாக உறுதியளித்துள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக வழங்க முடியாதுள்ளதாக திலினி பிரியமாலியும், ஜானகி சிறிவர்தனவும் குறித்த வர்த்தகருக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களாக டொலரை கோரி குறித்த வர்த்தகர், திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தனவின் காரியாலயங்களுக்கு சென்ற போதிலும் அது பலனளிக்கவில்லை.

எவ்வாறாயினும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் குறித்த வர்த்தகரிடம் ஜானகி சிறிவர்தன ஐபோன்-13 புரோ மெக்ஸ் ரக 4 கைப்பேசிகளை கோரியிருந்ததுடன், அதனை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே அதற்கான பணத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த கைப்பேசிகளை திலினி பிரியமாலியின் ஆண் நண்பர் என கூறப்படும் இசுறு பண்டார மற்றும் பொரளை சிறிசுமன தேரருக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்த சந்தர்ப்பத்தில் கைப்பேசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகரிடம் பொரளை சிறிசுமன தேரர், தங்களின் பிரச்சினையை தாம் தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

பணத்திற்கு பதிலாக தங்க கோலை பெற்றுக்கொள்ளுமாறு கூறிய நிலையில், அதனை குறித்த வர்த்தகர் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *