டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இணையத்தில் கர்மா என்கிற வார்த்தை ட்ரெண்டாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி.
‘கர்மா’ ட்ரெண்டாவது ஏன்?
உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தமது ட்விட்டர் பக்கத்தில் உடைந்த இதயம் போன்ற எமோஜியை பதிவிட்டிருந்தார். அதனை ரீ-ட்வீட் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ‘மன்னிக்க வேண்டும் சகோதரா, இதற்குப் பெயர்தான் கர்மா’ என குறிப்பிட்டுள்ளார்.
முகமது ஷமியின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்துடனான அரையிறுதி ஆட்டத்தை சுட்டிக்காட்டி, ‘ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத உங்களின் ஆட்டத்திற்கு பாகிஸ்தான் இன்று ஆடிய விதம் எவ்வளவோ பரவாயில்லை’ என ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஷமி குறித்து அக்தர் பேசியது என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு கடுமையான விமர்சனத்திற்கு வழிவகுத்தது. இந்திய அணியின் தோல்வியை விமர்சித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் பேசிய அவர், “இந்தியாவுக்கு இது ஒரு மோசமான தோல்வி. இந்திய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். அவர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான தகுதியை இழந்து விட்டார்கள். இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அம்பலமாகிவிட்டது.
இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்றாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசுவதற்கு இந்திய அணியில் ஒருவர் கூட இல்லை. பந்துவீச்சில் எந்தவித ஆக்ரோஷமும் இல்லை. அணி நிர்வாகம் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஏன் திடீரென உலக கோப்பை இந்திய அணியில் முகமது சமி சேர்க்கப்பட்டார்? அவர் நல்ல பந்துவீச்சாளர்தான். ஆனால் அவர் அணியில் இப்போது இடம்பெற தகுதியானவர் இல்லை.” என கடுமையாக விமர்சித்திருந்தார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளானது.
2021 டி20 உலககோப்பையில் ஷமிக்கு என்ன நடந்தது?
‘கர்மா’ என, அக்தரின் ட்வீட்டிற்கு முகமது ஷமி எதிர்வினையாற்றிய நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஷமி கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் குரல் கொடுத்திருந்ததை சுட்டிக்காட்டி இதுதான் இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான வித்தியாசம் என குறிப்பிட்டு இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
2021 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் பந்துவீசிய முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

பாகிஸ்தானின் வெற்றிக்கு இந்திய வீரர் முகமது ஷமியின் மோசமான பந்துவீச்சே காரணம் என சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
முகமது ஷமிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானும் குரல் கொடுத்திருந்தார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், “பல்வேறு அழுத்தங்கள், நெருக்கடிகள், தியாகங்களை கடந்துதான் ஒரு வீரர் நாட்டிற்காக விளையாடுகிறார். முகமது ஷமி ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரும் கூட. உங்கள் நட்சத்திரங்களை மதியுங்கள். இந்த விளையாட்டு மக்களிடையே ஒற்றுமையை கொண்டு வர வேண்டுமே தவிர பிரிவை ஏற்படுத்தக்கூடாது” என குறிப்பிட்டார்.
நடப்பு டி20 தொடரில் இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக பும்ரா விலகியதை அடுத்து அணியில் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஷமி விளையாடினார். 6 போட்டிகளில் விளையாடிய ஷமி 143 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றினார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 3 ஓவர்களை வீசிய முகமது ஷமி 39 ரன்களை வழங்கியது கவனிக்கத்தக்கது.
1992 உலக கோப்பை தொடரில் நம்ப முடியாத திருப்பங்களோடு பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று, இறுதி போட்டியையும் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது.
அதே பாணியில் 2022 டி 20 உலக கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு பல திருப்பங்கள் அமைந்தன. சூப்பர் 12 சுற்றில் கடைசி நாளில் 1 புள்ளி வித்தியாசத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
நியூசிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இறுதிப்போட்டியில் 1992-ஐ போன்றே இங்கிலாந்தை எதிர்த்து மெல்போர்னில் பலப்பரிட்சை நடத்தியது. 1992-ஐ போன்று இந்த முறையும் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால்., அந்த நம்பிக்கை பலன் தரவில்லை.
நன்றி – பிபிசி